UPCOMING EVENTS

உஹதுப்போர்…

பல்லை உடைத்த பகைவருக்கும் வல்லவனிடம் மன்றாடி நேர்வழிக்காக துஆ இரந்த ரவூஃபுன் ரஹீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உன்னத குணத்தை வெளியாக்கிய… உஹதுப்போர்…

தனது சிறிய தந்தையை கொடூரமாக கொலை செய்து, உறுப்புகளை சிதைத்தவர்களை கூட மன்னித்த ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மாபெரும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்த காரணமாயிருந்த… உஹதுப்போர்…

மறு உத்தரவு தரும் வரை இடத்தை விட்டு நகன்று விட வேண்டாம் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லை மீறி உற்சாகத்தில் அந்த இடத்தை விட்டு அகன்றதனால் ஏற்பட்ட மாபெரும் இழப்பு  இன்னல் மூலம் ‘நபிகளின் சொல்படி நடக்காவிடில் சமூகமே இன்னலை சந்திக்கும்’ என்ற பாடத்தை கற்றுத்தந்த… உஹதுப்போர்…

தனது உடலில் தொன்னூறுக்கும் மேற்பட்ட அம்புகளை தாங்கிய நாதர் தல்ஹா எனும் தியாகசெம்மல், ரஸூலின் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீதுள்ள தமது தீராத அன்பை அகிலத்திற்கு உணர்த்திய… உஹதுப்போர்…

‘தமது உயிரிலும் மேலான நபி ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள்’ என்று கேள்விப்பட்டு, அலறித்துடித்து, புது மாப்பிள்ளையாக ஓடி வந்து யுத்தத்தில் கலந்து ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக இன்னுயிரை நீத்த ஸஹாபியின் தியாகத்தை வெளிப்படுத்திய… உஹதுப்போர்…

இன்னும் அந்த ஸஹாபிகளின் தியாகம் ஏராளம், ஏராளம்…மதிப்போம் அவர்களை…வழி நடப்போம் அவர்களின் தூய பாதையில்….துதிப்போம் அந்த சீலர்களின் புகழை…

நாயனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் இன்னும் ஸெய்யிது ஷுஹதா ஹம்ஸா நாயகத்தின் மீதும், உஹதில் வீர மரணம் அடைந்தவர்கள் மீதும், அதில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபிகளின் மீதும், யா அல்லாஹ் நீ உனது ஞானத்தில் உள்ள எண்ணிக்கைக்கு உனது ஆட்சி நிலவும் காலமெல்லாம் ஸலவாத்-சலாம் சொல்வாயாக! ஆமீன்!!

Related Posts