UPCOMING EVENTS

குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் அபில் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு…பகுதி – 3

அவர்கள் திருவாய் மலர்ந்ததிலிருந்து…

நீங்கள் அருகிலிருக்கும் யானையை எப்படி பார்க்கிறீர்களோ,  அதாவது இது யானையின் தந்தம், காது, வால் இப்படி தனித்தனியாக உங்களால் பிரித்து தெளிவாக கூர்ந்து பார்க்கமுடிகிறதோ, அதைவிட தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் கிருபையால் ஏழு வானம் ஏழு பூமி அனைத்தையும் நான் பார்க்கிறேன் என்று ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முழங்கினார்கள்.

இதை மறுத்துவிடாதே சகோதரா, இன்று கூகுள் மேப்பில் நீ உலகத்தை மொத்தமாகவும், தனித்தனியாகவும், இந்த ரோடு,இந்த இடம் என்று, பார்க்கிறாய் அல்லவா? சாதாரனமானவர்களுக்கு அது, வல்லரசுகள் சதா பார்த்துக்கொண்டே இருக்கின்றது தமது செயற்கை கோளின் உதவியால். இதுவெல்லாம் கலிமா சொல்லாதவரால் இயலும் என்றால்,  கலிமா சொல்லிய முஃமினுக்கும், அதிலும் சிறந்தவர்களான அவனது நேசர்களுக்கு, அவ்லியாக்களுக்கு – படைத்த நாயனுக்காகவே வாழ்ந்த அந்த மஹா ஆத்மாக்களுக்கு –  சர்வ வஸ்துக்களின் ரப்பாகிய அல்லாஹ்வால் அருளப்பட்ட சக்தியை கற்பனை செய்ய முடியுமா?

இந்த நேரத்தில் தரீக்காவை பின்பற்றுபவர்கள் ஒன்றை நினைவுகூர வேண்டும். காதிரிய்யா வேறு, ஷாதிலிய்யா வேறு, ஜிஸ்திய்யா இன்னும் இது போன்ற தரீக்காக்களை வேறு வேறாக பார்க்கும் பழக்கத்தை இதயத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறிந்து விடுங்கள். காலத்திற்கும் காதிரிய்யா தரீக்காவின் மிகப்பெரும் ஞானக்கடல் மௌலல் கௌம் ஸாஹிபு கல்வத் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், கௌது நாயகமும் ஷாதுலி நாயகமும், இரண்டும் இரண்டு கண் என்று நான் சொல்லமாட்டேன், (ஏனென்றால் வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் பல வித்தியாசம் இருக்கிறது உ-ம். சுர்மா இடுவது வலதில் ஆரம்பிக்கிறோம். பின் இடது – வலது – இடது – வலதில் முடிக்கிறோம் ஆக 5-3 என்று சொல்லிவிட்டு அதில் முனாஃபிக் தனம் வந்துவிடுமே எனவே) எனக்கு இரண்டு பேர்களும் ஒரே கண் தான் என்கிறார்கள்.

இன்னும் ஷெய்கு இமாமுல் குரைஷிய்யி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

நீவிர் எம் எஜமானர் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை நினைவு கூறும் போதெல்லாம் திடனாக செய்யிதீ அபுல் ஹஸன் அலி சாதுலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தையே நினைத்தீர். அவ்வாறே நீர் எனது எஜமானர் அபுல் ஹஸன் சாதுலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தை நினைவு கூர்ந்தால் அது அபு முஹம்மது செய்யிது அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களையே நினைத்தீர்; என கூறியுள்ளார்கள்.

அது போல், சிந்திக்க வேண்டும் தரீக்காக்களின் பிள்ளைகளே! வெவ்வேறு மரத்தில் உள்ள கணிகளின் ருசி மாறலாம். ஒரே மரத்தில் உள்ள கணிகளின் ருசி மாற வாய்ப்பேயில்லை. அது போல், குத்பு நாயகம், க்வாஜா நாயகம், ஷாதுலி நாயகம், ரிஃபாய் நாயகம் போன்ற இன்னும் இது போன்ற நாதாக்கள் எல்லோரும் ஃபாத்திமத்து ஜுஹரா என்ற மரத்திலிருந்து வந்த கணிகளல்லவா? ஒரே மரத்திலுள்ள கணிகளின் ருசி வித்தியாசப்படாது என்றால், ஒரே கிளையிலிருந்து வந்தது எப்படி மாறும்? மேற்கூறப்பட்ட கௌதுகளில் ரிஃபாய் நாயகம் தவிர மற்ற நாதாக்கள் இமாம் ஹஸன் அவர்களின் கிளையிலிருந்து வந்தவர்கள்.  ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன். தொடர்வோம்…

அல்லாஹ் தஆலாவிடம் உனது கஷ்டங்களை சொல்லி உதவி கேள் என்று  , யாரும் சொல்வார்கள். ஷாதுலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு சொல்கிறார்கள் “என்னுடைய பெயரை கொண்டு அல்லாஹ் தஆலாவிடம் உதவி செய்ய சொல்லிக்கேள். நிச்சயம் பெற்றுக்கொள்வாய்”

என் பாட்டனார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் எனக்கு கண்மூடி முழிக்கும் நேரம் திரையிடப்பட்டாலும் என்னை நான் முஃமினாக எண்ண மாட்டேன், என் பாட்டனாரின் சுன்னத்துக்களில் ஒன்றை விட்டாலும் என்னை நான் முஸ்லிமாக எண்ண மாட்டேன் என ஷாதுலி  நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் சொன்னார்கள் என்றால் தமது இச்சைக்காகவோ அல்லது சுயவிளம்பரத்திற்காகவோ என்று எண்ணிவிடாதே சகோதரனே. அவர்கள் அல்லாஹ் தஆலாவின் ஜோதியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டவர்கள். அல்லாஹ் தஆலா, அவர்களுக்கு அளித்த, அவர்களுக்கு பொழிந்த தனது கொடைகளை, இன்னும் தான் பொழியும் கிருபைகளை உன்னதமான அருட்பேருகளை,  தான் உகப்புற்ற அந்த அடியாரின் பேசும் நாவின் மூலமாகவே வெளியாக்குகிறான் என்று புரிந்துகொள்!

மேலும் சொல்கிறார்கள், ஒ மனித வர்க்கங்களே! ஜின் வர்க்கங்களே! மலக்குகளே! என் ரப்பு எனக்கருளிய நிஃமத்துகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தால் கியாமம் விடிந்து விடும். ஆனால் அல்லாஹ் தஆலா எனக்கு அருளிய சீர் சிறப்புகளை எழுதி முடிக்க முடியாது!

இன்னும் ஒரு சம்பவத்தை சொல்லி அவர்களது எல்லையில்லா சீர் சிறப்புகளை பற்றிய நம் தொடரை நிறைவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

ரழியல்லாஹு அன் குத்புல் அக்பர்! ரழியல்லாஹு அன் கௌதுல் அஷ்ஹர்!

Related Posts